தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்



முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும். பழந்தமிழர்கள் வெண்பாஆசிரியம்வஞ்சிகலிபரி எனப் பல பா வடிவங்களைக் கையாண்டனர். இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
 புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து  எனப்  பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
              வழுவல கால வகையினானே 
என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.

புதுக்கவிதையின் தோற்றம்

        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழிலக்கிய வடிவம் செய்யுளாகவே இருந்தது இந்நூற்றாண்டில்  மேலை நாட்டில் பழைய யாப்பு உருவிலிருந்து விலகி இயைபு தொடை முதலியன இன்றி உரைநடை சாயலில் புதிய கவிஞர்கள் கவிதைகளைப் படைக்கத் தொடங்கினர்.
                              சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க நவ கவிதை” என்றார் பாரதி. முதலில் வசன கவிதை’ என்றும் பின்னர் சுயேச்சா கவிதை’, லகு கவிதை’, விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி

வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமைபடைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.  அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“என்பதாகும். பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்துதமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின

1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி,ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தைமணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன்,க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.

 2. எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையைவளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன்,ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன.புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா,தமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்

புதுக்கவிதை முன்னோடிகள்
பாரதியார்
தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்திற்கு வித்திட்டவராகப் பாரதியைத்தான் குறிப்பிட வேண்டும். மூட நம்பிக்கைகளையும் சாதி சமய வேறுபாடுகளையும் வன்மையாக எதிர்த்த வகையில் பாரதியின் கவிதை இன்று வரை புதுமை மங்காது திகழ்கின்றது. பாரதியின் கவிதை உள்ளடக்க அளவிலும் வடிவ அமைப்பிலும் புதுக்கவிதைக்கு வித்திட்டது. மேலும் பாரதியே முதன் முதலாக காட்சி, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்புகளில் வசன கவிதைகளைச் சோதனை செய்து பார்த்தவர். இவர் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்பெறுகின்றார்.

ந.பிச்சமூர்த்தி
பாரதிக்கு அடுத்துப் புதுக்கவிதை முயற்சியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ந.பிச்சமூர்த்தி.  மணிக்கொடி இதழில் 1934 இல் பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினார். செறிவாகவும் தெளிவாகவும் அறிவு பூர்வமான பார்வையில் கருத்துகளை அலசவும் சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் அவருக்கிருந்த இயல்பான அறிவுத் திறம் அவர் கவிதையில் பளிச்சிட்டது.

புதுக்கவிதை வளர்ச்சியில் இதழ்கள்
சிற்றிதழ்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும், இணைய ஊடகத்தில் பல்வேறு வலைத்தளங்களிலும் வலைப்பூக்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.

புதுக்கவிதை வடிவங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் மொழியமைப்பிலும் வெளியிடும் பாங்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா), ஹைபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.
           
சில புதுக்கவிதைச் சான்றுகள்
  நல்ல காலம் வருகுது                                                               உன் கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                 கடிகாரத்தின் கையில்
  தெருவிலே  நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!          

கருத்துகள்