திருக்குற்றாலக் குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி
ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் எறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் வேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்திலிருந்து வழிந்து ஓடும்; அதனால் சூரியனின் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; இளம் பிறையைச் சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்; 
 ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் வீழ்ச்சி, செல்லும் வேகத்தில் கழங்காடுவதைப் போல முத்துகளை ஒதுக்கிச் செல்லும்; அவ்வருவி, மக்கள் வாழ்கின்ற வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டு ஓடும்; வேடுவர்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும், தேன் இறால்களைப் பிய்த்து எடுத்தும், மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே கூத்தாடுவர்; பூண்கட்டிய யானைக்கொம்புகளை ஒடித்து உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தை இடிப்பார்கள். இளமை பொருந்திய குரங்குகள் இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக் கொண்டு அடித்து விளையாடும்; தேன் பெருகி ஓடுகின்ற செண்பகப் பூவின் மணம், தேவருலகினிடத்தே போய்ப் பரவும்; அருட்கொடை வழங்குகின்ற தேவாதி தேவராகிய குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லா வளப்பமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றால மலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழுகின்ற மலையாகும்; 
ஆடுகின்ற நாகப் பாம்புகள் கக்கிய எண்ணிறந்த மணிகள் எங்கும் ஒளிகொடுக்கும்; யானைகள் நிலாவை உண்ணும் உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவிடாமல் தடைசெய்யும், மலைக் குறவர்கள் தினைப்பயிரை விதைப்பதற்காகக் காடுகளை அழிக்கும்போது அதில் உள்ள குங்குமம் சந்தனம் உள்ளிட்ட மரங்களும் மணங்களைப் பரப்பும்; காடுகளில் எங்கும் ஓடிச்சென்று வரையாடுகள் துள்ளிக் கீழே பாயும்; காகங்கள் பறக்காத உயர்ந்த மலையில் மேகக் கூட்டங்கள் உச்சியில் சாய்ந்தோடும்; நீண்ட குறும்பலாவடியில் எழுந்தருளியிருக்கின்றவரும் கைலை மலையில் வாழ்பவருமாகிய திருக்குற்றாலநாதரின் நிலைபெற்றிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்;


கைலைமலைக்கு தெற்கே அமைந்த மலை. பொன்மலை போன்ற மேரு மலை போன்ற உயர்ந்த மலை. சிவசைலம் மலைக்கு வடக்கே அமைந்த மலை. இம்மலை மற்ற எல்லா மலைகளின் சிறப்பெல்லாம் தனக்குள் கொண்டிருக்கும் வளமுடையது. அது வைரமணியுடன் பலவகை மணிகளையும் விளைத்துத் தரும். வான்வழியாகச் செல்லும் ஞாயிறு குகைகளையே வழியாகக்கொண்டு நுழைந்து செல்லும். பாற்கடலில் தூங்கும் திருமால் எழுந்ததும் எல்லா உலகங்களிலும் போய்த் தேடுகின்ற மேன்மையாளராகிய திரிகூடநாதப் பெருமானுக்குரிய திரிகூட மலைதான் எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்
கொல்லி மலை குறத்திக்குப் பின் பிறந்த செல்லிக்கு உரிய மலை. அவளின் கணவனுக்குக் காணிமலையாக உள்ளது பழனிமலை. விந்தை மலை குறத்தியின் தந்தைக்குரிய மலை. இமயமலை குறத்திக்குரிய தமையனுக்குரிய மலை. சுவாமி மலை குறத்தியின் மாமியாளுக்குரிய மலையாகும். நாஞ்சில் நாட்டிலுள்ள வேள்வி மலை அவளின் தோழிக்குரிய மலையாகும். மேகங்கள் குமுறலாகிய பறையை முழக்க, அதற்கேற்ப மயிலினங்கள் நடனஞ்செய்கின்ற திரிகூட மென்னும் திருக்குற்றாலமலையே எங்களுக்குச் செல்வப்பொருளாக இருக்கின்ற நாங்கள் வாழும் மலையாகும்.

கருத்துகள்